ஆத்தூர், மார்ச் 14: தலைவாசலில் ஜெ., பிறந்த நாள் மற்றும் தமிழக அரசின் சாதனை விளக்க பிளக்ஸ் பேனரை அகற்றச்சொன்ன விஏஓவிடம், அதிமுக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைவாசலில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் அதிமுகவை சேர்ந்த எம்ஜிஆர் இளைஞரணி ஒன்றிய துணைத்தலைவர் கண்ணன் என்பவர், தனியாரின் நிலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் மற்றும் அதிமுக இரண்டாமாண்டு சாதனை விளக்க பிளக்ஸ் பேனர்களை பிரமாண்டமான அளவில் வைத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தலைவாசல் விஏஓ கலைச்செல்வன், நேற்று கண்ணனிடம் சென்று, பிளக்ஸ் பேனரை அகற்றும்படி கூறினார். அப்போது கண்ணன், விஏஓவிடம் தானது பட்டா நிலத்தில் தான் பேனர் வைத்துள்ளேன் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து விஏஓ கலைச்செல்வன், பிளாக்ஸ் பேனர் அகற்றாதது குறித்து உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து திரும்பிச் சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.