கரூர், மார்ச் 14: கரூர் நகராட்சிக்குட்பட்ட சுக்காலியூர் பண்டுதகாரன்புதூர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இரண்டு தெருக்களில் உள்ளன. இந்நிலையில், இந்த பகுதியில் இரண்டு தெருக்கள் ஒரு சேர சந்திக்கும் பகுதியின் மையப்பகுதியில் மின்கம்பம் உள்ளது. இதில் இருந்து பல்வேறு குடியிருப்புகளுக்கு மின்சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. சாலையின் மையப்பகுதியில் உள்ள மின்கம்பத்தினை வேறு பகுதிக்கு மாற்றித் தர வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லாமல் உள்ளது என கூறப்படுகிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்ளும் அளவுக்கு இந்த மின்கம்பம் உள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு, மின்கம்பத்தினை வேறு பகுதிக்கு மாற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.