×

திருக்கழுக்குன்றம் அருகே அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

திருக்கழுக்குன்றம், மார்ச் 14:திருக்கழுக்குன்றம் அடுத்த கருமாரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்  நாகரத்தினம் (42). அதிமுக பிரமுகர். மேட்டு கருமாரப்பாக்கம் கிராமத்தில் 15 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகை எடுத்து, தர்பூசணி பயிரிட்டு அறுவடை செய்து விற்று வருகிறார். இந்நிலையில், மேற்கண்ட நிலத்தில் சிறிய அளவிலான தர்பூசணி செடிகளை நாகரத்தினம் பயிரிட்டுள்ளார். இதையொட்டி, நேற்று முன்தினம் காலை நாகரத்தினம், அவரது மனைவி ரேவதி ஆகியோர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு சுமார் 8 மணியளவில், நாகரத்தினம் வீட்டுக்கு புறப்பட தயாரானார். அப்போது 5 பேர், அங்கு பைக்குகளில் சென்றனர். பின்னர், தர்பூசணி பழத்தை வாங்குவதுபோல் பேச்சு கொடுத்து விலை கேட்டனர். அப்போது, நாகரத்தினம் மற்றும் ரேவதி ஆகியோர் அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றனர்.சுதாரித்து கொண்ட நாகரத்தினம், அவர்களை தடுத்தார்.

இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், மறைத்து ைவத்திருந்த அரிவாளை எடுத்து, நாகரத்தினத்தின்  தலையில் சரமாரியாக வெட்டினர். பின்னர் கணவன், மனைவி அணிந்திருந்த தாலி, கொலுசு, தங்க செயின், மோதிரம், கம்மல் என  10 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். அங்கு படுகாயமடைந்து துடித்து கொண்டிருந்த நாகரத்தினத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : AIADMK ,Thirukkurukkulam ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...