×

சிறுமிக்கு தொல்லை; வாலிபர் கைது

தாம்பரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், நூத்தஞ்சேரி, கக்கன்ஜி தெருவை சேர்ந்தவர் பாபு (28). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாபு அவரது வீட்டின் அருகில் வசித்து வரும் 7 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பாட்டியிடம் தெரிவிக்க, அவர் சம்பவம் குறித்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாபுவை நேற்று கைது செய்தனர்.
* வியாசர்பாடி, மகாகவி பாரதியார் நகர் 18வது மத்திய குறுக்கு தெருவை சேர்ந்த தயா கிருஷ்ணன் என்பவரது மனைவி ரேணுகா (35). எண்ணூர் தனியார் நிறுவன ஊழியர். நேற்று வேலைக்கு செல்வதற்காக 4வது மெயின் ரோடு சந்திப்பில் கம்பெனி பஸ்சுக்கு காத்திருந்தபோது பைக்கில் வந்த 2 பேர் அவரது செல்போனை பறித்து சென்றனர். புகாரின்பேரில் எம்.கே.பி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* அண்ணாநகர், பஜனை கோயில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (41) என்பவரும் அவரது மனைவியும் நேற்று முன்தினம் இரவு நடுரோட்டில் சண்டை போட்டனர். இதை அவ்வழியாக சென்ற அரும்பாக்கத்தை சேர்ந்த சுதாகர் (30) என்பவர் தடுக்க முயன்றபோது இருவரும் அவரை கட்டையால் தாக்கினர். இதில் சுதாகர் மண்டை உடைந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
* புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகரை சேர்ந்தவர் கல்வெட்டு ரவி (37). பிரபல ரவுடி. இவரது தம்பி  தண்டையார்பேட்டை ரெட்டைக்குழி தெருவை சேர்ந்த  குரு என்ற குரு பிரசாத் (28). இவரை கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகளில் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு  புதுவண்ணாரப்பேட்டையில் குருபிரசாத் பிடிபட்டார்.
* புத்தாகரம் சூரப்பட்டு மெயின்ரோடு லட்சுமி அம்மன் நகரை சேர்ந்தவர் கந்தசாமி (35). தனியார்  வங்கி மேலாளர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஊருக்கு சென்றுவிட்டு  நேற்று வந்தார். பெரவள்ளூர் சதுக்கம் அருகில் கால்டாக்சிக்கு காத்திருந்தபோது பைக்கில் வந்த 2 பேர் அவரது செல்போனை பறித்து சென்றனர். புகாரின்பேரில் பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* மாங்காடு பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (51). நேற்று மாலை மாங்காடு, கேகே.நகர் பகுதியில் விநாயகம் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த பைக் மோதி சம்பவ இடத்தில் இறந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து பைக் ஓட்டி வந்த குன்றத்தூரை சேர்ந்த செல்வராஜ் (31) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Young ,
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்