தொட்டியம், மார்ச் 12: தொட்டியம் அருகே ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வீட்டில் 21 பவுன் நகை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சாமிதுரை (80). நேற்றுமுன்தினம் சாமிதுரை வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி லட்சுமியுடன் நாமக்கல்லில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து மீண்டும் வீடு திரும்பியபோது வீடு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்கசெயின், வளையல், மோதிரம் உள்பட 21 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சாமிதுரை கொடுத்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.