மன்னார்குடி, மார்ச்12: ரயில் பயணிகள் தரும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, ஏமாற்றுதல் தொடர் புடைய பிரச்சனைகளுக்கு ஆன் லைனில் புகார் தெரிவித்து மின்னனு எப்ஐஆர் பெறும் திட்டம் சாத்தியமில்லை எனவும், அதற்கு பதிலாக ரயில்வே பாதுகாப்பு படைக்கு இந்த வகை வழக்குகளை கையாளும் அதிகாரம் தந்து ஆன்லைனில் புகார் பெற ரயில்வே நிர்வாகம் ஆலோசிக்க வேண்டும் தொழிற்சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: ரயில்வேயில் பாதுகாப்பு படை பிரிவு ரயில்வே கட்டுப்பாட்டிலும், ரயில்வே போலீஸ் பிரிவு மாநில காவல்துறை கட்டுப்பாட்டிலும் இயங்கி வருகின்றன. ரயில்கள் மற்றும் ரயில்வே எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு தொடர்புடைய வழக்குகளை அந்தந்த மாநில ரயில்வே போலீசார்களே வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஆண்டுக்கு சுமார் 90 ஆயிரம் வழக்குகள் இவர்களிடம் பதிவு ஆகின்றன. இதில் ரயில் பயணிகள் தரும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, ஏமாற்றுதல் தொடர்புடைய புகார்கள் மட்டும் ஏறத்தாழ 45 ஆயிரம் ஆகும். கடந்த 2018 ம் ஆண்டு மட்டும் மத்திய ரயில்வேயில் மட்டும் 32 ஆயிரத்து 494 வழக்குகள் பதிவான. தமிழகம், கேரளம் அடங்கிய தெற்கு ரயில்வேயில் கடந்த 2018ம் ஆண்டு 3248 வழக்குகள் பதிவாயின. மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அனைத்து மாநில காவல்துறைகளை ஒருங்கிணைத்து, குற்றம் மற்றும் குற்றவியியல் கண்காணிப்பு வலைப்பின்னல் அமைப்பை உருவாக்கியது. இது ஒரு இணையதள அமைப்பு ஆகும். பொதுமக்கள் குறிப்பிட்ட சில வகை புகார்கள் ஆன்லைனில் பதிவு செய்து மின்னணு முதல் தகவல் அறிக்கை நகல் பெற, ஒரு மாநில போலீசார் மற்ற மாநில குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண, மாநிலங்கள் ஒருங்கினைந்து குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உதவக் கூடியது. இந்த வலைதள அமைப்பை பயண்படுத்தி, ரயில் பயணிகளுக்கு ஆன் லைனில் புகார்கள் பதிவு செய்யும் வசதி செய்து தர ரயில்வே அமைச்சம் திட்டமிட்டது.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சகமும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. டில்லி விஞ்ஞான் பவனில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி நடத்த ரயில்வே பயணிகள் பாதுகாப்பு தொடர்பான அகில இந்திய மாநாட்டில் இது தொடர்பாக விவாதிக்கப் பட்டது. கடந்த 2018 ஆண்டு ரயில்வே போலீசார் பதிவு செய்த வழக்குகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. வழக்குகள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மத்திய ரயில்வேயில் 2017ம் ஆண்டை விட 2018 ம் ஆண்டு 10 ஆயிரம் வழக்குகள் கூடுதலாக பதிவாயின. மாநில அரசுகளுக்கு இது கூடுதல் சுமை என்பதால் இத்திட்டத்திற்கு தயங்கின. கடந்த பிப்ரவரி மாதம் 8 ம் தேதி ராஜ்யசபா உறுப்பினர் டாக்டர் ராமச்சந்திர ராவ் இத்திட்டம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ரயில்வே துணை அமைச்சர் ரெஜன் கொஹைன் பதில் அளிக்கையில் இது மாநிலங்கள் சம்மந்தப்பட்ட விவகாரம் என தெளிவு படுத்தி இருக்கிறார். எனவே ரயில் பயணிகளுக்கு ஆன்லைனில் புகார் பெற்று மின்னனு முதல் தகவல் அறிக்கை தரும் திட்டம் இப்போதைக்கு சாத்தியம் இல்லை. அத னால் ரயில்வே பாதுகாப்பு படைக்கு இந்த வகை வழக்குகள் கையாளும் அதிகாரம் தந்து ஆன்லைனில் புகார் பெற ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.