பாபநாசம், மார்ச் 12: பயிறுவகை பயிர் சாகுபடியில் அதிக மகசூல் பெற டிஏபி கரைசல் இலைவழி உரமிடுதல் அவசியம் என்று விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பாபநாசம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாபநாசம் வட்டாரத்தில் நெல் தரிசில் பயிறுவகை பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகசூலை அதிகரிக்க டிஏபி கரைசல் இலைவழி உரமிடுதல் மிகவும் அவசியமாகும். பூக்கும் தருணத்தில் 2 சதவீத டிஏபி கரைசலை தெளிக்க வேண்டும். இந்த 2 சதவீத டிஏபி கரைசலை தயாரிக்க 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாளே ஊற வைத்து மறுநாள் வடிகட்டி தெளிந்த கரைசலை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை, வேளையில் இலை வழியாக தெளிக்க வேண்டும். இதேபோல் 15 நாட்கள் கழித்து மறுமுறை தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பூக்கள் திரட்சியாகவும், அதிக எண்ணிக்கையிலும் காணப்படுவதுடன் விவசாயிகளுக்கு அதிக மகசூலும் கிடைக்கும்.