×

194 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை சின்னங்களுடன் கூடிய தலைவர் சிலைகளை மூட நடவடிக்கை அரியலூர் கலெக்டர் தகவல்

அரியலூர், மார்ச்12:  17வது நாடாளுமன்ற தேர்தல் அட்டவனையை நேற்று முன்தினம் தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் ஒருபகுதியாக தேர்தல் நடைமுறைகளை நடைமுறைப்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம்  கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் அமைதியாக தேர்தல் நடத்துவதற்கு உரிய விதிமுறைகளை எடுத்து கூறியதோடு, தேர்தலில் பங்கெடுக்கும் கட்சிகள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றியும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. வாகனங்களின் எண்ணிக்கை, செலவினங்கள், கட்சி பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு உரிய வழிமுறைகள், தேர்தல் நாளன்று கடைபிடிக்கவேண்டிய விதிகள் உள்ளிட்டை தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியரும், சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயலட்சுமி, சிதம்பரம் நாடாளுமன்றத்திற்கு 1708 வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும், அதில் அரியலூர், ஜெயங்கொண்டத்தில் மட்டும் 194 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார். நேற்று இரவில் இருந்து 18 பறக்கும்படைகள், கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் சோதனைகள் நடைபெற்ற வருகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதையடுத்து, பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிமரங்கள், கட்சிகொடிகள், கல்வெட்டுகள் கட்சியினரே அகற்றிக்கொள்ள அனைத்து கட்சியினரிமும் கூறப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் சின்னங்களுடன் கூடிய கட்சித்தலைவர்களின் சிலைகளை மூடிவைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : collector ,Ariyalur ,leaders ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...