நாகை, மார்ச் 12: நாகப்பட்டினம் பாப்பாக்கோவிலில் இயங்கி வரும் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களில் மகளிர் தின விழா நடைபெற்றது. சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆனந்த் தலைமை வகித்தார். நாகையில் சமூகம், மருத்துவம், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்கிய நான்கு பெண்மணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். சமூகசேவை புரிந்த பெண்கள் கவுசல்யா மற்றும் விஜயலெட்சுமி, மருத்துவ சேவை புரிந்த மங்கையர்க்கரசியையும், விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்த செல்வி விசித்ரா, திருமதி பூமாஆனந்த் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ரேகாபத்மநாபன், சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கல்வி நிறுவன இயக்குநர் சங்கர், அனைத்து கல்லூரி முதல்வர்களும், பேராசிரியர்கள், ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்கம், வணிகர் சங்கம், ஜேசிஜே சங்க பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சர் ஐசக் நியூட்டன் கல்வியியல் கல்லூரி முதல்வர் வரவேற்றார். தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் கல்லூரி ஆலோசகர் லெஷ்மிநாராயணன் நன்றி கூறினார்.