திருச்சுழி, மார்ச் 12: திருச்சுழியில் கட்டுமானப் பணி முடிந்த பூங்கா, விளையாட்டுத் திடலை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழியில் இளைஞர்கள், சிறுவர்கள் உடற்பயிற்சி செய்யவும், வாலிபால், டென்னிஸ், டென்னிகாட் விளையாடவும், பெரியவர்கள் பொழுதுபோக்கவும் 2016-17 தாய் திட்டத்தின் கீழ், தாலுகா அலுவலகம் முன் ரூ.30 லட்சத்தில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. கட்டுமானப் பணி முடிந்து 8 மாதங்களுக்கு மேலாகியும், பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஏமாற்றம் அடைந்துள்ளது. எனவே, விரையில் பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘திருச்சுழியில் இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை தூண்டவும், ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை உருவாக்கவும், பல லட்ச ரூபாய் செலவில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. பெரும்பாலான கிராமங்களில் விளையாட்டு திடல்கள் பராமரிப்பின்றி உருக்குலைந்து கிடக்கின்றன.
ஒரு சில கிராமங்களில் பொதுமக்களே பணம் செலவு செய்து பராமரித்து வருகின்றனர். பல கிராமங்களில் விழிப்புணர்வு இல்லாமல் திடல்கள் புதர்மண்டிக் கிடக்கின்றன. விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து கிடக்கின்றன. விளையாட்டில் ஆர்வம் இல்லாத இளைஞர்களுக்கும் விளையாட்டு, உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை உருவாக்க இத்தகையை திடல்கள் பயன்படும். எனவே, திருச்சுழி அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத்திடல், பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.