×

நற்புதம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை

காளையார்கோவில், மார்ச் 12: காளையார்கோவில் அருகில் உள்ள நற்புதம் கிராமத்தில் புதிதாக ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காளையார்கோவில் அருகில் சூசையப்பர்பட்டிணம், நற்புதம், குறுந்தனி ஆகிய கிராமங்களில் 650க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. மூன்று கிராமத்தினருக்கும் ஒரு ரேஷன் கடைதான் உள்ளது. இதில் நற்புதம், குறுந்தனி கிராம மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூசையப்பர்பட்டிணம் கிராமத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு பொருட்கள் வாங்க வந்து செல்லும் பெண்களுக்கு வழியில் வழிப்பறிக் கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்குத் தனியாகச் செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர்.

நற்புதம் கிராமத்தில் புதிதாக பகுதி நேர ரேஷன்கடை அமைத்துத் தருமாறு இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாவட்ட கலெக்டர் மற்றும் தனி வட்டாட்சியர் (குடிமை பொருள்) ஆகியோரிடம் கிராமத்தினர் அனைவரும் கையெழுத்திட்டு மனு கொடுத்துள்ளனர். ஆனால் இது வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர். குருந்தனி கிராமத்தைச் சேர்ந்த மாதவன் கூறுகையில், ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு ஆண்கள் இருந்தால் மட்டுமே வாங்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. நற்புதத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க இடம் ஒதுக்கி தருகிறோம் என்று கூறியும் எந்தப் பயனும் இல்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை வேண்டும் என்று கூறினார்.

Tags : Village people ,ration shop ,village ,Uttaranchal ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...