×

பூச்சிகள், நோய்கள் தாக்குவதில்லை வருமானம் அதிகரிக்க தினை பயிரிடலாம்

பழநி, மார்ச் 12: வருமானம் அதிகரிக்க தினை பயிரிடலாம். இந்தப் பயிரை பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குவதில்லை என வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். தினை பயிரிட கோ-6, கோ(தி) 7 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். செம்மண் மற்றும் இருமண் கலந்த நிலங்கள் உகந்ததாகும். பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தைச் சட்டிக் கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். வரிசை விதைப்பாக இருந்தால் 1 எக்டேருக்கு 10 கிலோ விதைக்க வேண்டும். தூவுவதாக இருந்தால் 1 எக்டேருக்கு 12.5 கிலோ விதைக்க வேண்டும். 22.5 சென்டிமீட்டருக்கு * 7.5 சென்டிமீட்டர் இடைவெளியில் விதைக்க வேண்டும். 1 எக்டேருக்கு தேவையான விதையளவிற்கு 600 அசோபாஸை அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் 1 எக்டேருக்கு 2 கிலோ அசோபாஸை மணல் மற்றும் 25 கிலோ தொழுஉரம் கலந்து தூவ வேண்டும். ஒரு எக்டேர் நிலத்தில் அடியுரமாக 12.5 டன் மக்கிய தொழுஉரத்தை கடைசி உழவின்போது பரப்பி பிறகு நிலத்தை உழ வேண்டும். 1 எக்டேருக்கு முறையே 44:22 கிலோ தழை மற்றும் சாம்பல் சத்துக்களை இட வேண்டும். இந்தப் பயிரை பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. அதனால் பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கதிர்கள் நன்கு காய்ந்து, இலைகள் பழுத்தவுடன் அறுவடை செய்து, களத்தில் காயவைத்து அடித்து தானியங்களை பிரித்து சுத்தம் செய்ய வேண்டும். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களையோ, வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாமென வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED உர பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்