கரூர், மார்ச் 8: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியின் வழியாக திருச்சி, திண்டுக்கல், மணப்பாறை உட்பட பல்வேறு பகுதிகளுக்கான பேருந்துகள் சென்று வருகின்றன. மேலும் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இதன் வழியாக செல்கிறது.தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியின்போது, பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் நிழற்குடை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் நிழற்குடையின் உட்புறம் அழுக்கடைந்து யாரும் உட்கார முடியாத அளவுக்கு சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து பயணிகளும் வெளியில் நின்றுதான் பேருந்து ஏறி செல்கின்றனர். தேவையான இடத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தாலும் மோசமான நிலைமை காரணமாக யாரும் இதனை பயன்படுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் உட்புறம் படுத்து தூங்குவதாலும் அச்சம் காரணமாக நிழற்குடையை யாரும் பயன்படுத்துவதில்லை.எனவே இதனை கவனத்தில் கொண்டு நிழற்குடையை பராமரித்து அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் சுகாதாரமாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.