×

சிறப்பு ரயில் இயக்கும் விவகாரம் கரூர் மாவட்டம் தொடர்ந்து புறக்கணிப்பு பயணிகள் கடும் அதிருப்தி

கரூர், மார்ச் 8:சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதில் கரூர் மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.கரூர் ஜங்ஷன் ரயில் நிலையம் ஈரோடு ஜங்ஷனுக்கு அடுத்தபடியாக பெரிய ரயில் நிலையமாக ஏ கிரேடு அந்தஸ்துடன் திகழ்கிறது. கரூர்- சேலம் அகல ரயில்பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டதால் கரூரில் இருந்து நான்கு திசையிலும் ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. கிழக்கே திருச்சி, நாகை வரையும், மேற்கே ஈரோடு, கோவை வரையும், தெற்கே திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களுக்கும், வடக்கே சேலம் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் இருப்பு பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. புகைபோன்ற சுற்றுச்சூழல் பாதிப்பை போக்கும் வகையிலும், வேகத்தை அதிகரிக்கும் வகையிலும் ரூ.321 கோடி மதிப்பில் ஈரோடு- கரூர்- திருச்சி, சேலம்- கரூர்- திண்டுக்கல் இருப்பு பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது.எனினும் புதிய ரயில்கள் இயக்கத்தில் கரூர் புறக்கணிக்கப்படுவதாக பயணிகள் தொடர்ந்து கூறி வந்த நிலையில் தறபோது சுவிதா சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில்களில் இடநெருக்கடி தவிர்க்க சுவிதா சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கேரள மாநிலம் எர்ணாகுளம், திருவனந்தபுரம் உள்ளிட்ட 10 நகரங்களுக்கு சென்னையில் இருந்து இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது. எனினும் கரூரில் இருந்து ஒரு ரயில் கூட இயக்கப்படவிலலை. சிறப்பு ரயில்கள் இயக்கத்தில் தொடர்ந்து கரூர் புறக்கணிக்கப்படுகிறது. தீபாவளி சிறப்பு ரயில், கோடைகால சிறப்பு ரயில்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் சுவிதா சிறப்பு ரயில்களும் கரூர் வழியாக இயக்கப்படவில்லை.இதற்கு பயணிகள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கரூர்- சேலம் அகலப்பாதை அமைத்தும் ரயில்சேவை விரிவாக்கம் செய்யப்படாமலேயே இருக்கிறது. இது பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. சேலம் அகலப்பாதை திட்டத்தை நான் தான் கொண்டுவந்தேன் என கரூர் எம்பியும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை கூறி வருகிறார். இருப்புப்பாதை அமைக்கப்பட்டு விட்டது. மின்பாதையாகவும் மாற்றப்பட்டு விட்டது. புதிய ரயில்கள் இயக்கத்தை பொறுத்தவரை ரயில்வே அமைச்சகம் தான் முடிவு செய்கிறது. அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டும்.பாதையை கொண்டு வந்தால் மட்டும் போதாது. ரயில் சேவையை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு ரயில்கள் கூட அனைத்து அடிப்படை கட்டமைப்புகள் இருந்தும் கருர் மாவட்டம் பயன் பெறும் வகையில் இயக்க முடியவில்லை என ரயில் பயணிகள் தெரிவித்தனர்.

Tags : Karur ,district ,passenger passengers ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்