மணப்பாறை, மார்ச் 8: வளநாடு கைகாட்டியில் அடகுகடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் சிசிடிவி கேமரா பதிவு பெட்டியை தூக்கிச் சென்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் தேனூர் கிராமம் போலாம்பட்டியை சேர்ந்தவர் பொன்னு மகன் துரைச்சாமி(39). இவர் அருகில் உள்ள திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை வளநாடு கைகாட்டி பகுதியில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் (6ம்தேதி) இரவு துரைசாமி வழக்கம் போல் கடை மூடிவிட்டு சென்றார். நேற்று (7ம் தேதி) காலை கடை கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலையடுத்து கடைக்கு வந்த துரைச்சாமி, உள்ளே சென்று பார்த்தபோது கடையின் உள்ளே இருந்த சிசிடிவி பதிவு பெட்டி கொள்ளையடிக்கப்பட்டதும், மேலும் நகை பெட்டகத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து துரைச்சாமி அளித்த புகாரின்பேரில் மாவட்ட எஸ்பி ஜியாவுல்ஹக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு அடகு கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.