கோவை, மார்ச் 8: கோவையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல மாநாடு நடக்கிறது. இதில், சீதாராம் யெச்சூரி பங்கேற்று பேசுகிறார். கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், கோவை மண்டல மாநாடு கோவை சிவானந்தாகாலனியில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். கோவை மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி வரவேற்கிறார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி சிறப்புரையாற்றுகிறார்.
மக்கள் ஒற்றுமைக்கு மத்திய ஆட்சியாளர்களால் ஏற்பட்டுள்ள மதவாத பேரபாயம் குறித்தும், மத்திய-மாநில ஆட்சியாளர்களின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக ஏற்பட்டுள்ள தொழில்நெருக்கடி, விவசாய நெருக்கடி, சுகாதார சீரழிவு, சுற்றுச்சூழல் பாதிப்பு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இம்மாநாட்டில் தலைவர்கள் பேசுகின்றனர். திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று பேசுகின்றனர்.