ஈரோடு, மார்ச் 8: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நலச் சங்கத்தினர் வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட ஞானஒளி அமைப்பு தலைவர் பெருமாள், நாமக்கல் மாவட்ட மாற்றுதிறனாளிகள் வாழ்வுரிமை நலச்சங்க தலைவர் அன்புச்செழியன் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மனவளர்ச்சி குன்றிய மாற்றுதிறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் குடிசை மாற்றுவாரியம் மூலம் வீடு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுதிறனாளிகள் சுயவேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் சங்கத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆவின்பூத் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாணைப்படி 40 சதவீதம் கொண்ட அனைத்து மாற்றுதிறனாளிகளுக்கும் மாத உதவிதொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கேன்டீன் நடத்த அனுமதி வழங்க வேண்டும். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட் உள்புறம், சிந்தாமணி அருகில், மாநகராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுதிறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கழிப்பறை உள்ளது. இதை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டிக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.