×

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று உலக பெண்கள் தினம் கொண்டாட வேண்டும் சிஇஓ உத்தரவு

திருவண்ணாமலை, மார்ச் 8: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று உலக பெண்கள் தினம் கொண்டாட வேண்டும் என சிஇஓ உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பெண்களின் உரிமையை நிலைநாட்டவும், பெண்களுக்கு சம உரிமை அளிக்கவும், ஆண்-பெண் பாலின சமநிலையை உருவாக்கவும் பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. வளர்ந்து வரும் இக்காலத்தில் பெண்களுக்கு சமுதாயத்தில் உள்ள நிலை குறித்தும், அனைத்து பெண்களும் சமநிலை அடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், ஆண்கள்- பெண்கள் ஏற்றத்தாழ்வு நிலையை போக்கவும், பாலின வேற்றுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து பெண்களும் சமுதாயத்தில் சரிநிகர் சமம் என்ற உன்னத நோக்கத்தில் அவர்களை நாம் போற்ற வேண்டும். பெண் கல்விக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சிறந்து விளங்கவும் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி அவர்களை ஆதரிக்க வேண்டும். உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்று(8ம் தேதி) அனைத்து பள்ளிகளிலும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி பெண்களை கவுரவிக்க வேண்டும். மேலும், பெண்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். பெண்கள் முன்னுரிமைக்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேசிய விருது வழங்கி பெருமை செய்யப்பட்டுள்ளது. பெண்கள் நலனை மென்மேலும் சிறப்புற செய்ய அனைத்து பள்ளிகளிலும் பயிலும் பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags : International Women's Day ,CEO ,schools ,district ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...