சென்னை, மார்ச் 8: திருவொற்றியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் தெருவில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் பத்திரப் பதிவு, பத்திர நகல் எடுத்தல், வில்லங்கம் மற்றும் திருமணம் பதிவு போன்றவைகளுக்காக வந்து செல்கின்றனர். தற்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலமே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. குறிப்பாக, பத்திரப்பதிவு செய்வதற்கும், அசல் பத்திரத்தை திரும்ப பெறுவதற்கும், வில்லங்கம் எடுப்பதற்கும் என அனைத்திற்கும் அதிக அளவில் பணம் கேட்பதாகவும் அவ்வாறு பணம் கொடுக்காத பட்சத்தில் வேண்டும் என்று தாமதம் செய்வதாகவும் புகார்கள் சென்றன.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை சென்னை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி குமரன் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் இந்த சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட பொதுமக்களும், சில அலுவலர்களும் இருந்தனர். பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளை அப்படியே இருங்கள் என கூறிய அதிகாரிகள் சோதனையை தொடங்
கினர். இந்த சோதனை நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்றது. அதன் பின்னர் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அனைவரும் கிளம்பிச் சென்றனர். இந்த சோதனையில் அலுவலகத்தில் இருந்த இடைத்தரகர்கள், அலுவலர்கள் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத சுமார் 50 ஆயிரம் மற்றும் ஆவணங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுமக்கள் புகார்
லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தபோது, சார்பதிவாளர் ராஜி வெளியில் சென்றிருப்பது தெரிந்தது. அவரை போனில் தொடர்புகொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், உடனே திரும்பி வரும்படி அழைத்தனர். அவரும் சிறிது நேரத்தில் அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் தாங்கள் காலையில் இருந்து பத்திர பதிவிற்காக காத்திருக்கிறோம் என்று புகார் தெரிவித்தனர். இதனால் சார்பதிவாளர் ராஜியிடம், ‘‘பத்திர பதிவு முடிக்காமல் நீங்கள் ஏன் அலுவலகத்தை விட்டு வெளியே சென்றீர்கள்,’’ என அதிகாரிகள் கேட்டனர். பின்னர் அங்கு காத்திருந்த பொதுமக்களின் பத்திர பதிவுகளை முடித்து அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, விசாரணையை தொடர்ந்தனர்.