காஞ்சிபுரம், மார்ச் 8: காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதில், ஏராமான பக்தர்கள் கலந்து கொண்டு, திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவ பெருமாள் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திரபிரபை, கருடசேவை, சேஷ வாகனம், நாச்சியார் திருக்கோலம், சந்திரபிரபை, யாழி வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைதொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேர் உற்சவம் நேற்று காலை வெகு விமரிசையாக நடந்தது. இதில் திருப்புட்குழி, பாலுசெட்டிச்சத்திரம், முசரவாக்கம், தாமல் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, இணை ஆணையர் அசோக்குமார், செயல் அலுவலர் தியாகராஜன், ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் கோயில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்தனர்.