ஓசூர், மார்ச் 7: ஓசூரில், நேற்று செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியை, கிருஷ்ணகிரி எம்பி அசோக்குமார், கலெக்டர் பிரபாகர் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, பர்கூர் எம்எல்ஏ ராஜேந்திரன், ஓசூர் ஆர்டிஓ விமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் வரவேற்றார். கண்காட்சியில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த அரசு திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற டாக்டர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் புகைப்படங்கள், பசுமை வீடு வழங்கும் திட்டம், லேப்டாப் வழங்கும் திட்டம், விலையில்லா கறவை பசுக்கள், மகப்பேறு நிதியுதவிகள் வழங்கும் திட்டங்கள், அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஹாரிஷ் ரெட்டி, ஜெயராமன், முன்னாள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் நாராயணன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபால், தாசில்தார்கள் பாலசுந்தரம், வெங்கடேசன், மிருணாளினி மற்றும் துணை தாசில்தார்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.