கிருஷ்ணகிரி, மார்ச் 7: கிருஷ்ணகிரி தூய அன்னை பாத்திமா தேவாலயத்தில், கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் நேற்று சாம்பல் புதனுடன் துவங்கியது. கிருஷ்ணகிரி தூயஅன்னை பாத்திமா தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள், இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலை நினைவு கூரும் வகையில் மேற்கொள்ளப்படும் 40 நாட்கள் தவக்கால திருப்பலி பூஜைகள் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, பங்கு தந்தை சூசை தலைமையில், நெற்றியில் சாம்பலால் சிலுவை இடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், உண்ணாநோன்பு மேற்கொண்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர், அசைவ உணவை தவிர்த்து, சுத்த போஜனம் கடைபிடிப்பவர்களுக்கு பங்கு தந்தை மற்றும் உதவி பங்கு தந்தைகள், நெற்றிகளில் சாம்பலால் சிலுவை வரைந்து ஆசிர்வாதம் வழங்கினர். தொடர்ந்து நடைபெற்ற திருப்பலியில், கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளை ேசர்ந்த ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். இதே போல், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும், சாம்பல் புதனையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.