ஒரத்தநாடு, மார்ச் 7: ஒரத்தநாட்டில் அரசு மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் வகுப்பறையில் மாணவி மாரியம்மாள் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் மலர்விழி கூறியதாவது: இந்த கல்லூரியில் 350க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தினசரி ஒவ்வொரு மாணவிகள் வகுப்பறையிலேயே மயங்கி விழுவதும், சிகிச்சை அளிப்பதுமாக உள்ளது. தினசரி கல்லூரிக்கு வரும் மாணவிகள் காலை உணவு சாப்பிட்டு விட்டு வருகிறார்களா, மன உளைச்சலில் வருகிறார்களா என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். மாணவிகளுக்கு பாடம் நடத்த பேராசிரியர்கள் முயலும்போது இதுபோன்ற வேதனையான சம்பவங்கள் நடப்பதால் வகுப்புகளை நடத்த முடியாமல் பேராசிரியர்களும், கல்வி கற்க முடியாமல் மாணவிகளும் அவதிப்பட்டு வருகின்றனர் என்றார்.
மாணவிகளின் மயக்கம் குறித்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் பேராசிரியரும், மகப்பேறு மருத்துவ நிபுணருமான கஸ்தூரிபாய் கூறியதாவது: கல்லூரிக்கு புறப்படும்போது காலை உணவை மாணவிகள் தவிர்க்கக்கூடாது. ஒரத்தநாடு பகுதியை பல மாணவிகளுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதும், அதிகளவு ரத்த சோகை இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவும் ரத்தசோகை, மாணவிகளை அதிகளவே பாதிப்படைய செய்திருக்கிறது என்றார்.