கரூர், மார்ச் 7: கரூர் அமராவதி பழைய பாலத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து திருமாநிலையூர் வரை அமராவதி ஆறு குறுக்கிடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பழைய மற்றும் புதிய அமராவதி பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. புதிய பாலத்தின் வழியாக அனைத்து பேருந்துகளும் செல்கின்றன. பழைய பாலத்தின் வழியாக இரண்டு சக்கர வாகன போக்குவரத்து மட்டுமே நடைபெற்று வருகிறது.
தற்போதைய பழைய அமராவதி பாலச்சாலை அனைத்தும் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும் எனவும் பலதரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதற்கிடையே இந்த பழைய பாலத்தை பார்வையிட்ட போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இதனை சீரமைத்து அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்திருந்தார். எனவே அனைத்து துறை அதிகாரிகளும் பழைய அமராவதி பாலத்தை பார்வையிட்டு அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.