×

கால்நடைகளுக்கு 16ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நாளை துவக்கம்

கரூர், மார்ச் 7: கால்நடைகளுக்கு 16ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நாளை துவங்குகிறது. இது குறித்து கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளதாவது: அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் தேசிய கோமாரி நோய் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 15 சற்று தடுப்பூசிப்பணி முடிவடைந்துள்ளது. தற்போது நாளை 8ம்தேதி துவங்கி 28ம்தேதி வரை 16வது சுற்று கோமாரி தடுப்பூசி பணி கரூர் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் 1,86,550 பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு போடப்படவுள்ளன. இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட நாளில், இந்த தடுப்பூசி பணிக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி குழுவினர் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் தற்போதுள்ள அனைத்து பசுவினம் மற்றும் எருமையின கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் 100 சதவீதம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்
ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, கிராமப்புற விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து கிராமங்களிலும் இன்று (7ம்தேதி) நடைபெறவுள்ள கிராம சபா கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் பங்கேற்று கால்நடை மருத்துவர்கள் கூறும் அறிவுரையின்படி கால்நடைகளை குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கோமாரி நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போர்களுக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோயினால் இறப்புகள் குறைவாக இருந்தாலும் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைவு மற்றும் எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளின் சினைப்பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.மேலும், நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலங்களில் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வருதல், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. இந்த நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால் உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.

எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு நாளை (8ம்தேதி) முதல் 28ம்தேதி வரையிலும், விடுபட்ட கால்நடைகளுக்கு 29ம்தேதி முதல் ஏப்ரல் 7ம்தேதி வரையிலும் ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட நாளில், இடத்தில் தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : round ,Komari Disease Vaccination Camp ,
× RELATED ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி...