×

சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பிரதமர் மோடி மீது பரபரப்பு புகார்: மாற்றுத்திறனாளியை இழிவு செய்ததாக குற்றச்சாட்டு

சென்னை: சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் பாரதி அளித்த புகார் மனு: கடந்த 2ம் தேதி மேற்கு வங்க மாநிலம் கரக்பூரில் உள்ள மத்திய அரசின் உயர்க் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (ஐஐடி) சார்பில் “ஸ்மார்ட் இந்திய ஹக்கத்தான் 2019” நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவர்களுடன் காட்சி வழி ஊடகம் வழியாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். டிஸ்லெக்சியா என்ற ‘கற்றல் மாறுபாடு’ குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவக்கூடிய வகையில் கரக்பூர் ஐஐடி நிறுவனத்தில் மேற்கொண்டு வரும் ஆய்வு திட்டத்தை  திக்‌ஷா ஹரியால் என்ற மாணவி, பிரதமரிடம் விளக்கி பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது இடைமறித்து பேசிய பிரதமர் மோடி, “அப்படின்னா அது 40, 50 வயது உள்ளவர்களுக்கும் பயன்படும்தானே” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பெயர் குறிப்பிடாமல் கேலி செய்தார். மேலும், “அவரின் அம்மாவும் மகிழ்ச்சியாக இருப்பார் அல்லவா” என சோனியா காந்தியையும் பெயர் குறிப்பிடாமல் மோடி கேலி செய்தார். மோடியின் கேலி, கிண்டலை திக்‌ஷா ஹரியால் மாணவியுடன் இருந்த சக மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மாற்றுத்திறனாளிகள், டிக்ஸ்லெக்சியா பாதித்தவர்கள் குறித்து மாணவி திக்‌ஷா ஹரியால் பேசியபோது, அதனை கனிவோடு கவனித்து, மாற்றுத்திறனாளிகளுக்கான ஆய்வை ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக, மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தை இழிவுப்படுத்தி, அரசியல் நையாண்டிக்கு பயன்படுத்தும் வகையில், அரசு பொது நிகழ்ச்சியில் நாட்டின் பிரதமர் அப்பட்டமாக சட்ட விரோதமாக நடந்துகொண்டது,

பார்வையில் குறிப்பிட்டுள்ள சட்ட பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.  மோடியின் செயல்பாடு ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு மன வேதனையை உருவாக்கி இருக்கிறது. இதுகுறித்து எங்கள் சங்கம் சார்பில் பிரதமர் மோடி தன்னுடைய குற்றத்திற்காக வெளிப்படையாக மன்னிப்பு கோரவேண்டும் என கோரியிருந்தோம். ஆனால் இன்று வரை மோடி மன்னிப்பு ஏதும் கோரவில்லை. எனவே அவர் மீது சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Narendra Modi ,Saidapet ,police station ,
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...