பண்ருட்டி, மார்ச் 7: பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. பெரியநாயகி அம்பாளுக்கு நான்கு கால சிறப்பு அபிஷேகம் நடந்தது. சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வந்தார். சரக்கொன்றைநாதர் லிங்கர் திருமேனிக்கு 24 மணி நேரமும் தொடர்ச்சியாக பக்தர்களே தங்கள் கைகளால் பல்வேறு நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய நதிநீரை கொண்டு அபிஷேகம் செய்தனர்.வருடத்தில் ஒருநாள் மட்டுமே நடைபெறும் சிறப்பு மகா அபிஷேகம் நள்ளிரவு 12 மணிக்கு லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திலகவதியார், திருநாவுக்கரசு திருதொண்டர்கள் குழு மூலம் ஆன்மிக சொற்பொழிவு, திருவாசக இன்னிசை கச்சேரி நடந்தன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் உற்சவதாரர்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டன.