குளத்தூர்,மார்ச்.7: குளத்தூர் அருகே சிதிலமடைந்த சாலையால் கிராம மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்திலிருந்து துரைச்சாமிபுரம், சக்கம்மாள் புரம், மேலமருதூர் வழியாக தூத்துக்குடி செல்லும் தார் சாலை உள்ளது. இதன்வழியாக அப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் தூத்துக்குடி, மதுரை போன்ற வெளியூர் பயணங்களுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த பல வருடங்களாக இவ்வழிசாலை கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. வேடநத்தத்திலிருந்து துரைச்சாமிபுரம் வரையிலான 4 கிலோமீட்டர் சாலை படுமோசமாக உள்ளது. மேலும் இச்சாலை வழியாக தூத்துக்குடியிலிருந்து குளத்தூர் செல்லும் ஒரே அரசு பேருந்து மற்றும் வாகனங்கள் இச்சாலையினால் பழுதாகி போக்குவரத்து சிரமங்களை மேற்கொள்கிறது. இதனால் சிறு வியாபாரிகள், பள்ளி மாணவர்கள் என பலரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும் பொரும்பாலான மாணவர்கள் வேடநத்தத்திலுள்ள அரசு பள்ளிக்கு செல்வதற்கு சைக்கிள் மூலமாக செல்வதால் சைக்கிளும் அடிக்கடி பழுதாகி மாணவர்கள் பெரும் பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே இப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு சிதிலமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.