தூத்துக்குடி, மார்ச் 7: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு ஆறுமுகநேரி பொதுமக்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, வக்கீல் சுப்பிரமணி, தலைமையில் பேரூராட்சி முன்னாள் தலைவர் தங்க திலகம் உள்ளிட்ட பலர் வந்தனர். அவர்கள் டிஆர்ஓ வீரப்பனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது; ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியை சேர்ந்த 10 வார்டுகள் காயல்பட்டினம் வருவாய் கிராமத்தில் உள்ளது. ஆறுமுகநேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 10 வார்டுகளையும் உடனடியாக ஆறுமுகநேரி வருவாய் கிராமத்தில் இணைக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் இதுவரை இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து முதற்கட்டமாக நாளை மறுதினம் (8ம் தேதி) ஆறுமுகநேரி மெயின் பஜாரில் மறியலில் ஈடுபட உள்ளோம். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் இது குறித்த உரிய ஆணையை வருவாய்த் துறை பிறப்பிக்காவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலையும் புறக்கணிப்போம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.