புதுச்சேரி, மார்ச் 6: கோரிமேடு அன்னை தெரசா பட்டமேற்படிப்பு மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்புத் துறை மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடந்தது. புலமுதன்மையர் டாக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் சங்க செயலாளர் தேவி வரவேற்றார். மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி கைலாசம் கலந்து கொண்டு தற்குறிப்பு எப்படி தயாரிப்பது என்பதும் குறித்தும், வேலைவாய்ப்புத் துறை தலைவர் ஜெயக்குமார் நேர்முக தேர்வில் பங்கு கொள்வது எப்படி என்றும் மாணவர்களுக்கு விளக்கினர். பின்னர், இருவரும் மாணவர்களுடன் கலந்துரையாடி சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட இறுதியாண்டு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வேலை வாய்ப்புத்துறை ஆலோசகர் பிரகாஷ் யோகானந்தம் நன்றி கூறினார்.