பெரம்பலூர், மார்ச் 6: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக தேர்தலின்போது ஜனநாயகக் கடமையாற்றுவோம் என்ற உறுதி மொழி ஏற்புக்கூட்டம் நடந்தது. பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தின் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக, 2019 பாராளுமன்ற தேர்தலின்போது ஜனநாயகக் கடமையாற்றுவோம், வாக்குரிமையை பயன்படுத்துவோம், வாக்கினை செலுத்துவோம். சாலைப் பணியாளர்கள் குடும்பங்கள் தோறும் இன்று (6ம்தேதி) முதல் விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை நடத்துவோம் என்ற உறுதிமொழி ஏற்புக்கூட்டம் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பெரியசாமி, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் துவக்கவுரையாற்றினார். மாநில செயலாளர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார். இதில் அரசு ஊழியர்சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் ஆளவந்தார் வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் நிறைவுரையாற்றினார். இதில் 30க்கும்மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட இணைச்செயலாளர் முத்து நன்றி கூறினார்.