காஞ்சிபுரம், மார்ச் 6: மகா சிவராத்திரியை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மகா சிவராத்திரி, சிவனுக்குரிய விரதமாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டா,ல் கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றியும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிவராத்திரி அன்று ஒரு நாள் முழுவதும், 6 கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு சிவாலயங்களில் சன்னதியின் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால், ஒரே நாளில் ஓர் ஆண்டிடுக்ன பலனும் நமக்கு கிடைக்கும். அதனால் தான் சிவராத்திரி விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது என கூறப்படுகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 127 சிவன் கோயில்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு குவிந்தனர். இரவு முழுவதும் கண்விழித்து சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரத்தில் புகழ் பெற்ற ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர், கைலாசநாதர், புண்ணியகோட்டீஸ்வரர், சித்தீஸ்வரர், முத்தீஸ்வரர், மணிகண்டேஸ்வரர், இரவாதீஸ்வரர், பிறவாதீஸ்வரர், நகரீஸ்வரர் ஆகிய சிவன் கோயில்களில் நேற்று முன்தினம் இரவு மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைதொடர்ந்து, சிவனுக்கு 6 கால சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவனை தரிசனம் செய்தனர். கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், கலைநிகழ்ச்சிகள், தெய்வபக்தி பாடல்கள் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில்களில் இரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்து வழிபாடு நடத்தினர்.இதேபோல் செங்கல்பட்டு, உத்திரமேரூர், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், கல்பாக்கம், திருப்போரூர், கூடுவாஞ்சேரி, திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், கேளம்பாக்கம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 127 சிவன் கோயில்களில் மகா சிவாராத்தியையொட்டி சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.