கரூர், மார்ச் 6: கரூர் வெங்கமேடு மேம்பாலம் புகழூர் சாலையில் அமைந்துள்ளது. வெங்கமேடு பகுதியில் இருந்து சர்ச் கார்னர் வழியாக கரூருக்கு வரும் வாகனங்கள், இங்கிருந்து செல்லும் வாகனங்கள் இந்த மேம்பால இறக்க சந்திப்பு சாலை வழியாக செல்கின்றன. இதேபோன்று ரயில் நிலையத்தில் இருந்து கரூர் நகருக்குள் வரும் வாகனங்கள், கரூர் நகரில் இருந்து ரயில் நிலைய பகுதிக்கு செல்லும் வாகனங்கள் இந்த சாலை சந்திப்பில் செல்கின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரி வாகனங்களும் அதிக அளவில் சென்று வருவதால் மேம்பால இறக்கத்தில் வாகனங்கள் முட்டி மோதி கொள்கின்றன. காலை 9 மணி அளவில் திருச்சியில் இருந்து வரும் பாசஞ்சர் ரயிலில் ஆயிரக்கணக்கானோர் கரூர் வருகின்றனர்.
இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் புகழூர் சாலை மேம்பால இறக்கத்தில் வாகனங்கள் முட்டி மோதி கொள்கின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசர வாகனங்களான தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் போன்றவை கூட துரிதமாக செல்ல முடியாத நிலைமை உள்ளது. மேம்பால இறக்கத்தில் சாலை துவங்குவால் அங்கிருந்து வரும் வாகனங்கள் கட்டுப்பாடு இன்றி போகின்றன. போக்குவரத்து நெரிசலில் சிக்கி பணிக்கும், கல்வி நிலையங்களுக்கும் தாமதமாகவே சென்று வர வேண்டியதிருக்கிறது. போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.