×

கரூர் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் வாடி வதங்கும் வெற்றிலை

கரூர், மார்ச் 6:கரூர் மாவட்டத்தில் கடும் வெயிலால் வெற்றிலை பயிர்கள் கருகி வருகின்றன. கரூர் புகழூர், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், பாலத்துறை உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை சாகுபடி ஆயிரக்கணக்கான ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புகழூர் பகுதி மற்றும் கரூர் வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் விளையும் வெற்றிலைகள் வேலாயுதம்பாளையம் வெற்றிலை மண்டிக்கும், வேலூரில் உள்ள தினசரி வெற்றிலை ஏல மார்க்கெட்டிற்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட வெற்றிலை மண்டிகளுக்கு திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர், மோகனூர், பரமத்தி போன்ற நாமக்கல் மாவட்ட விவசாயிகளும் விற்பனைக்காக வெற்றிலைகளை கொண்டு வருகின்றனர். இங்கு நடைபெறுகின்ற வெற்றிலை ஏலத்தில் கலந்து கொள்வதற்காக கரூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை போன்ற ஊர்களில் இருந்து மொத்த வியாபாரிகள் வந்து வெற்றிலை ஏலம் எடுத்து லாரிகள் மற்றும் ரயில்கள் மூலம் அனுப்பப்படுகிறது. மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உபி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் வெற்றிலை அனுப்பப்படுகிறது. தற்போது கடும் வெயில் காரணமாகவும், நீரின்றியும் வெற்றிலை பயிர்கள் கருகி வருகின்றன.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், புகழூர் வட்டாரத்தில் தொன்றுதொட்டு வெற்றிலை பயிரிட்டு வருகிறோம். விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இதைத்தவிர வேறு தொழில் தெரியாது என்பதால் இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகிறோம். வெற்றிலை விவசாயத்திற்கு அரசால் அளிக்கப்படும் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. நிலத்தை குத்தகைக்கு எடுத்துத்தான் சாகுபடி செய்கின்றனர். சொட்டு நீர் பாசனம் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இருந்தாலும் பயிரிடுபவர் பெயரில் சிட்டா பட்டா அடங்கல் போன்ற சான்றிதழ்களை கேட்கின்றனர். இதில் விதிகளை தளர்த்த வேண்டும். முன்பெல்லாம் புகழூர் வட்டாரத்தில் மட்டும் சுமார் 150 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி நடைபெற்றது. இன்றைய நிலையில் 300 முதல் 400 ஏக்கர் என பரப்பு குறைந்து விட்டது. காரணம் காவிரியில் தண்ணீர் வந்து 6 ஆண்டுகளுக்கு மேலாகிறது. கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கினால் வந்த நீரை பயன்படுத்தி சாகுபடி செய்தோம். நிலத்தடி நீரை பயன்படுத்தி தற்போது பயிர் வளர்த்து வருகிறோம். கரூர் மாவட்டத்தில் மழை இல்லை. காவிரி நீரை நம்பியே வெற்றிலை சாகுபடி செய்து வருவதாக தெரிவித்தனர்.

Tags : district ,Karur ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் சொட்டுநீர்...