இடைப்பாடி, மார்ச் 1: இடைப்பாடி காளியம்மன் கோயில் தீமிதி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இடைப்பாடி வெள்ளாண்டிவலசு ஓம்சக்தி காளியம்மன், முனியப்பன் கோயில் மாசி திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் காளியம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், வழிபாடுகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். நேற்று காலை தீ மிதி விழா நடந்தது. இதற்காக கோயில் வளாகத்தில் அதிகாலையிலே குண்டம் பற்ற வைக்கப்பட்டது.
காலை 7 மணியளவில் முதலில் பூசாரி குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து கைக்குழந்தைகளுடன் பெண்கள் மற்றும் ஆண்கள் பல்வேறு அலகு குத்தியபடி 6,000க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல், இடைப்பாடி அடுத்த பழையபேட்டை காளியம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி தீமிதி விழா நடந்தது. இதில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.