×

வையம்பட்டி அருகே டோல்பிளாசாவில் சுங்க கட்டணம் தர மறுத்து பாதுகாவலர் மீது தாக்குதல் போலீஸ் விசாரணை

மணப்பாறை, மார்ச் 1: வையம்பட்டி அருகே சுங்கச்சாவடி பாதுகாவலர் தாக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம்  வையம்பட்டி அருகே உள்ள பொன்னம்பலம்பட்டியில் சுங்கசாவடி உள்ளது. நேற்று நள்ளிரவு சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மூன்று சுற்றுலா வேனில் சென்னை நோக்கி சென்றுள்ளனர். அப்போது இரு வேனில் இருந்தவர்கள் சுங்க கட்டணம் செலுத்திய நிலையில், மூன்றாவது வேனில் வந்த பிரமுகர்கள் சுங்க கட்டணம் கட்ட மறுத்து சுங்க சாவடி ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பணம் வசூலிக்கும் அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சமக பிரமுகர் ஒருவரை சுங்க சாவடி பாதுகாவலர் தங்கமாப்பட்டியை சேர்ந்த அடைக்கன் வெள்ளைச்சாமி(52) என்பவர் தடுத்து நிறுத்தினார்.

அவரை சமக கட்சியினர் இடது நெற்றியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். அதனைத்தொடர்ந்து கட்டணம் செலுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதில் பாதுகாவலர் வெள்ளைச்சாமி ரத்தகாயமடைந்தார். இதனையடுத்து வெள்ளைச்சாமி மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சுங்கசாவடி அதிகாரிகள் வையம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : attack ,guardian ,Dolphila ,Vayampatti ,
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...