கும்மிடிப்பூண்டி, மார்ச் 1: கும்மிடிப்பூண்டி அருகே நடுரோட்டில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர், கிளீனர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தை ஒட்டி சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் தச்சூர் கூட்டுச்சாலையில் இருந்து ஆரம்பாக்கம் வரை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு பலகை வைக்காததால் இரவு நேரத்தில் லாரி டிரைவர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு இரும்பு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி பெத்திக்குப்பம் பகுதி தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர், கிளீனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை அறிந்த சிப்காட் போலீசார் விரைந்து வந்து கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் சிலர் கூறுகையில், ‘‘சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சாலை பணி நடந்து வருகிறது. இதை அறிவிக்கும் வகையில் 500 மீட்டர் முன்பே அறிவிப்பு பலகை வைத்து, அதில், தடுப்புச் சுவர் உள்ளது என்று குறிப்பிட வேண்டும். அப்படி இருந்தால், ஓட்டுனர்கள் சுதாரித்து கொள்வார்கள். எனவே, அறிவிப்பு பலகைகள் நெடுஞ்சாலையில் வைக்க வேண்டும் என ஓட்டுனர்கள், அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.