×

ஏசி மெஷின் பொருத்திய ஓட்டை வழியாக வீட்டினுள் புகுந்து 10 சவரன் திருடிய 3 சிறுவர்கள் கைது

சென்னை:  மதுரவாயல் ஆலப்பாக்கம் பாலமுருகன் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (34). இவர், கடந்த 25ம் தேதி குடும்ப நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டார். இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். வீட்டை திறந்து உள்ளே சென்றபோது பொருட்கள் சிதறி கிடந்தன. படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, பீரோவை திறந்து அதில் வைத்து இருந்த 10 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. வீட்டின் படுக்கை அறையில் ஏசி மெஷின் பொருத்தி இருந்த ஓட்டையை தற்காலிகமாக அடைத்துள்ளனர்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அதன் வழியாக நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மதுரவாயல் பகுதியை சேர்ந்த 15 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கெல்லீசில் உள்ள சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Tags : boys ,sovereigns ,house ,AC ,
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு