கரூர், மார்ச் 1: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள நகராட்சி குமரன் தொடக்கப்பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது.
பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு, அன்னையர் குழு, முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் நகராட்சி குமரன் தொடக்கப்பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கும் விழா நேற்று காலை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை கவுரி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட அனைத்து ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக டேபிள், சேர், பூவாளி, வாளி, டம்ளர், நூலகத்திற்கு புத்தகங்கள், நீர் சுத்திகரிப்பான் போன்ற பல்வேறு பொருட்கள் கொண்ட கல்விச் சீரினை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள், மக்கள் பாதை பகுதியில் இருந்து ஊர்வலமாக பள்ளி வரை எடுத்துச் சென்று பள்ளியின் பயன்பாட்டுக்கு வழங்கினர்.
கல்விச்சீர் வழங்கப்பட்டதற்கு அனைத்து மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் நன்றி தெரிவித்து கொண்டனர்.