தா.பேட்டை, பிப்.28: துறையூர் பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறப்பு விழா நடைபெற்றது. துறையூர் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் உப்பிலியபுரம் அரசு போக்குவரத்து பணிமனை ஆகியவற்றில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டுமென பொதுமக்களும், போக்குவரத்து கழக ஊழியர்களும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாநிலங்களவை உறுப்பினரின் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை ரத்தினவேல் எம்பி திறந்து வைத்தார். மேலும் துறையூர் தாலுகா மருவத்தூர் ஊராட்சியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நாடக மேடையை திறந்து வைத்தார். பகளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பயிலும் 71 மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் எடுத்து செல்ல சில்வர் உபகரணம் வழங்கினார்.