காஞ்சிபுரம், பிப்.28: காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் துறை சார்பாக ‘’விரிஞ்சிகா 2019’’ எனும் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஷ்ணுபோத்தி தலைமை தாங்கினார். பதிவாளர் சீனிவாசு முன்னிலை வகித்தார். இயந்திரவியல் துறைத்தலைவர் ராஜ்மோகன் வரவேற்றார். காஞ்சிபுரம் எல் அண்டு டி உற்பத்தி பிரிவு மேலாளர் குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இயந்திரவியல் துறையின் தோற்றம், வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை, இந்த துறையில் மாணவர்கள் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பேசினார். அனைத்துத் துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இறுதியில் இயந்திரவியல் துறை பேராசிரியர் செங்கா ரெட்டி நன்றி கூறினார்.