×

கரூர் மாவட்டத்தில் கோடைகால குடிநீர் தேவையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் தமிழக ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

கரூர், பிப்.28: கோடைகால குடிநீர் தேவையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என தமிழக ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக ஜனநாயக கட்சி கரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நேற்று கரூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் இளமாறன் வரவேற்றார். நிறுவனத்தலைவர் சத்தியமூர்த்தி சிறப்புரையாற்றினார். குழந்தைவேல் நன்றி கூறினார். கூட்டத்தில் கோடைகாலம் ஆரம்பிக்க உள்ளதால் கரூர் மாவட்டத்தில் குடிநீர் தேவையை கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தூய்மையான குடிநீர் மாவட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்க செய்ய வேண்டும். தொழில் நகரமாக இருப்பதால் கோடைகாலத்தில் மின்சாரம் தங்குதடையின்றி கிடைக்க செய்ய வேண்டும். கரூர் மாவட்டம் முழுவதும் பான்பராக், குட்கா, திருட்டு டீசல் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம், காவல்துறை, சுகாதார துறை நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்வது. கரூர் மாவட்டத்தில் பைனான்ஸ் என்ற பெயரில் கூலித் தொழிலாளர்கள் அப்பாவி பொதுமக்கள் நடுத்தர வர்க்கத்தினரை வாட்டி வதைத்து தற்கொலை வரை கொண்டு செல்லும் கந்துவட்டி தொழிலை ஒழித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Democrat ,Tamil Nadu ,district ,Karur ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...