தரங்கம்பாடி, பிப்.28: தரங்கம்பாடி அருகே குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.தரங்கம்பாடி அருகே சென்னை- நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் கிடந்த குப்பைகள் காற்றில் பறந்து செல்வதால் தீவைத்து கொளுத்துகின்றனர். அதனால் ஏற்பட்ட புகை சாலையில் புகை மண்டலமாக மாறி அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்துகிறது.
தீபாவளிக்கு வெடி வெடிப்பதால் ஏற்படும் புகை சுற்றுசூழல் மற்றும் வானத்தின் வெளி மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி வெடி வெடிப்பதற்கும் வெடிகள் தயாரிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ள நிலையில், ஆங்காங்கே தெருக்களிலும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் குப்பைகளை கொட்டி அவற்றை தீ வைத்து அழிப்பது தினசரி நடக்கும் நிகழ்ச்சியாகிவிட்டது. சாலை ஓரங்களில் குப்பைகளை தீவைத்து அழிப்பதால் ஏற்படும் புகை வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை கொடுப்பதுடன் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனே கடுமையான நடவடிக்கை எடுத்து சாலை ஓரங்களில் குப்பைகளுக்கு தீவைப்பதை தடை செய்ய வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.