கோவை,பிப்.27: கோவை அரசு நடுநிலைப்பள்ளிகளில் புதிதாக வகுப்பறைகள் அமைக்க ரூ.1.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவையை பொறுத்தவரையில் இந்த திட்டத்தில் 12 பள்ளிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு பள்ளிகள் மலை பிரதேசத்தில் உள்ளன. இது குறித்து எஸ்.எஸ்.ஏ அதிகாரிகள் கூறுகையில், ‘‘சமதள பகுதிகளில் 10 பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன. இதில் ஒவ்வொரு வகுப்பறைக்கும் ரூ.9.8 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மலை பிரதேசங்களில் இரண்டு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன. இதில் தலா ஒவ்வொரு வகுப்பறைக்கும் ரூ.23.28 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுக்கு பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்,’’ என்றனர்.