ஓசூர், பிப்.27: ஓசூர் அரசு மருத்துவமனை தாய், சேய் நல பிரிவில் பிரசவம் பார்க்க மருத்துவர்கள் இல்லாததால், கர்ப்பிணி பெண்களை அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஓசூர் அரசு மருத்துவமனையில் தாய்-சேய் நலப்பிரிவு, காசநோய் சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. ஓசூர் மட்டுமின்றி கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்ைட, சூளகிரி, கெலமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான மக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றர். இந்நிலையில், தாய்-சேய் நலப்பிரிவு மற்றும், காசநோய் தடுப்பு பிரிவு என 13 பிரிவுகளுக்கு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், இதர மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், உள் நோயாளிகள் மட்டுமின்றி வெளிநோயாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஒருங்கிணைந்த 24 மணி நேர தாய் -சேய் நல அவசர கால சிகிச்சை பிரிவில், ஒரு மாதத்துக்கு 380 பிரசவங்கள் நடைபெறுகிறது. இப்பிரிவில், 94 செவிலியர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில் 46 பேர் மட்டுமே உள்ளனர். 8 டாக்டர்கள் பணியாற்ற வேண்டிய பிரசவ வார்டில், தற்போது ஒருவர் கூட பணியில் இல்லை. இதனால் பிரசவம் பார்க்க வெளியில் இருந்து தான் மருத்துவர்களை அழைக்க வேண்டிய நிலை உள்ளது. அவர்களும் வராதபட்சத்தில் நிறைமாத கர்ப்பிணிகளை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். தற்போது, வெயில் சுட்டெரித்து வருவதால் சுமார் 50 கி.மீ., பயணம் செய்து கிருஷ்ணகிரிக்கு செல்வதற்குள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாக கர்ப்பிணி பெண்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் கூறும்போது, 242 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் 46 செவிலியர்களே பணியில் உள்ளனர். இதனால், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்பட இதர மருத்துவ ஊழியர்களை பணி நியமனம் செய்ய, மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.