வத்தலக்குண்டு, பிப். 27: வத்தலக்குண்டு அருகே ராணுவவீரர்கள் அதிகம் உள்ள மேலக்கோவில்பட்டிக்கு பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். வத்தலக்குண்டு அருகேயுள்ளது மேலக்கோவில்பட்டி. ராணுவவீரர்கள் அதிகம் உள்ளதால் இவ்வூர் ராணுவ கிராமமே என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதிக்கு ஒரு அரசு டவுன் பஸ் சென்று வந்தது. தற்போது அந்த பஸ்சும் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் மாணவ, மாணவிகள், வியாபாரிகள், விவசாயிகள் குண்டும், குழியுமான சாலையில் 2 கிமீ தூரம் நடந்து சென்று வத்தலக்குண்டு மெயின்ரோட்டை அடைந்து பின் அங்கிருந்து பஸ், ஷேர் ஆட்டோவில் ஏறி பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.
மாலையில் அதேபோல் பஸ், ஷேர்ஆட்டோ பிடித்து 2 கிமீ நடந்து ஊர் வந்து சேர்கின்றனர். இதனால் அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பள்ளி, கல்லூரி நேரங்களிலாவது வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, உசிலம்பட்டி செல்லும் பஸ்களை மேல்கோவில்பட்டி வழியாக விட வேண்டும். மேலும் சைக்கிளில் செல்வதற்கு வசதியாக சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூகஆர்வலர் அசோக்குமார் கூறுகையில், ‘சேவுகம்பட்டி பேரூராட்சி தற்போது பச்சைப்பட்டி ஊருக்கு புதிய தார்ச்சாலை அமைத்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கியுள்ளனர். அதேபோல் மேலக்கோவில்பட்டி சாலையையும் போர்க்கால அடிப்படையில் புதுப்பிக்க முன்வர வேண்டும்’ என்றார்.