திண்டுக்கல், பிப். 27: கமலேஷ் சந்த்ரா கமிட்டி பரிந்துரையின்படி பதவி, ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். திண்டுக்கல் கோட்டம் அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகேயுள்ள மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று நடைபெற்றது. கோட்டத் தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். செயலர் விஜயன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராமராஜ் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கமலேஷ் சந்த்ரா கமிட்டியின் பரிந்துரையின் படி 12, 24, 36 வருடத்துக்கு பதவி உயர்வு அளித்து, 2, 4, 6 என்ற ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சமும், சிவியரன்ஸ் அலவுன்ஸ் ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு குரூப் இன்ஷூரன்ஸ் வழங்க வேண்டும். சம்பள குறைப்பை நிர்வாகம் நிறுத்தி கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.