ஜெயங்கொண்டம், பிப்.26: ஆண்டிமடம் வட்டாரத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் நிதியுதவி பெறுவதற்கான துவக்கவிழா ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் மத்திய, மாநில அரசுகளால் மண், விதைப்பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையில் விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் மத்திய அரசால் சிறு,குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6000 வழங்கும் திட்டம் 24ம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டிமடம் வட்டாரத்தில் 50 விவசாயிகளுக்கு முதல் தவணை நிதிக்கான ஆணைகளை வேளாண்மை உதவி இயக்குநர் கண்ணன் மற்றும் வேளாண்மை அலுவலர் ராதிகா வழங்கினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் செய்திருந்தினர். இறுதியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.