கரூர், பிப். 26: கரூர் மண்மங்கலம் ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் ஆண்டு அறிவியல் கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா 2019 நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் சுப்ரமணியன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் மாணவிகளின் புதிய அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
எதிர்கால இந்தியாவின் அறிவியல் கனவை நிறைவேற்றும் வகையில் பல்வேறு கண்டு பிடிப்புகளும் இடம் பெற்றிருந்தன. பாரம்பரிய உணவுத் திருவிழாவில் பண்டைய காலத்து உணவு முறைகளும், அவற்றின் மருத்துவ குணமும், உணவே மருந்தான முன்னோர்களின் வாழ்க்கை முறையை போற்றும் வகையிலும் அதிகளவு பாரம்பரிய உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த விழாவில் பாரம்பரிய உணவை சுவைத்த பெற்றோர்களும், பொதுமக்களும் பாராட்டி சென்றனர்.