×

டிராக்டர் மீது சிமெண்ட் லாரி மோதி கிளீனர் பரிதாப பலி

வேப்பூர், பிப். 26:  வேப்பூர் அருகே சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மோதியதில் டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கிளீனர் பரிதாபமாக இறந்தார். டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை வாடிப்பட்டியை சேர்ந்தவர் தங்கராசு மகன் சந்திரன் (33), டிரைவர். இவர் டேங்கருடன் கூடிய டிராக்டரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் மதுரை வாகைபுரத்தைச் சேர்ந்த கிளீனர் கணேசன் என்பவர் பயணம் செய்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே தொண்டாங்குறிச்சி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திருச்சியில் இருந்து தியாகதுருகம் நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றிச்சென்ற லாரி டிராக்டர் டேங்கரின் பின்புறமாக மோதியது.

இதில் டிராக்டரில் பயணம் செய்த கிளீனர் கணேசன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
மோதிய வேகத்தில் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் திருச்சி மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த நடராஜன் (60) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக வேப்பூர் பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : victim ,
× RELATED கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி